மாட்டிறைச்சியால் உத்தரபிரதேசத்தில் கல்வீச்சு; காவல் ஆய்வாளர் கொலை… 2 பேர் கைது
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் ஏற்பட்ட வன்முறையின் போது காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் ஏற்பட்ட வன்முறையின் போது காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை அரங்கேறி வருகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால் இதனை தடுப்பதில் உ.பி அரசு மெத்தனம் காண்பித்து வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் தற்போது மீண்டும் ஒரு வன்முறை அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மாடு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. இதனால் கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்து பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிரக்கில் ஏற்றிக்கொண்டு, புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, ஒரு கும்பல், காவல்துறையை நோக்கி திடீரென கற்களை வீசி அருகில் இருந்த காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தனர். இதன் காரணமாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனாலும் கல்வீச்சை கும்பல் நிறுத்தவில்லை. இதனால் கல்வீச்சில் சிக்கி காவல் ஆய்வாள சுபோத் குமார் சிங் படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல், காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 வயதுடைய சுமித் என்ற வாலிபர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வன்முறை தொடர்பாக 27 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.