மறைமுகத் தேர்தல் தற்கொலைக்கு சமம் – கே.எஸ். அழகிரி 

 

மறைமுகத் தேர்தல் தற்கொலைக்கு சமம் – கே.எஸ். அழகிரி 

மக்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்காமல், கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுப்பது தற்கொலைக்கு சமம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவரது ட்விட்டர் பக்கத்தில், “உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிமுக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாக கருதி காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ks alagiri

உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி நேரடித் தேர்தல் நடத்தாமல் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது கடுமையான கண்டனத்திற்குரியது. மேயரை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது. மக்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்காமல், கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுப்பது தற்கொலைக்கு சமம் ” என தெரிவித்துள்ளார்.