மருத்துவர்களுக்கு கிடைக்காத பாதுகாப்பு கருவி பத்திரப்பதிவு துறைக்கு அளித்தது ஏன்? –  எடப்பாடி கம்பெனி செய்த புத்திசாலித்தனங்கள்… டிடிவிதினகரன் காட்டம்

 

மருத்துவர்களுக்கு கிடைக்காத பாதுகாப்பு கருவி பத்திரப்பதிவு துறைக்கு அளித்தது ஏன்? –  எடப்பாடி கம்பெனி செய்த புத்திசாலித்தனங்கள்… டிடிவிதினகரன் காட்டம்

கொரோனா பாதிப்பு காலத்தில் மருத்துவர்களுக்கு வழங்காத பாதுகாப்பு கருவிகளை பத்திரப்பதிவுத் துறையினருக்கு வழங்கியது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி அரசின் பல்வேறு நிகழ்வுகளை பட்டியலிட்டு காட்டமான கேள்வியை டி.டி.வி.தினகரன் எழுப்பியுள்ளார்.

கொரோனா பாதிப்பு காலத்தில் மருத்துவர்களுக்கு வழங்காத பாதுகாப்பு கருவிகளை பத்திரப்பதிவுத் துறையினருக்கு வழங்கியது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி அரசின் பல்வேறு நிகழ்வுகளை பட்டியலிட்டு காட்டமான கேள்வியை டி.டி.வி.தினகரன் எழுப்பியுள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“கொரோனா என்னும் இக்கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஒருவரையொருவர் விலகியிருந்து சமூக விலகலைக் கடைபிடிப்பதே முதல் மருந்து. ஊரடங்கு முடியும் வரையிலும், முடிந்த பின்பும் கூட சில காலத்துக்கு இந்த நெறிமுறையை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பேரிடரை நாம் எல்லோரும் இணைந்து எதிர்த்துப் போராடிவரும் இந்த நேரத்தில் அரசியல் பேசுவது பொருத்தமற்றது என்றாலும், இக்கட்டான நேரத்தில் மாநில அரசு காட்டிவரும் அலட்சியத்தை, எதிர்க்கட்சி என்ற போர்வையில் சிலர் நிகழ்த்திவரும் அபத்தங்களையும் பகிர நினைக்கிறேன்.

corona-patients-mp

ஜனவரி 30ம் தேதி கேரளாவில் கொரோனா கால் பதித்து கொஞ்சம் கொஞ்சமாக பரவி மார்ச் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் ஆபத்தான கட்டத்தைத் தொட்டபோது இங்கே சட்டமன்றம் நடந்துகொண்டிருந்தது. இந்த சூழலில் சட்டமன்றம் கூடுவது நல்லதல்ல, கூட்டத் தொடரை ஒத்திவையுங்கள் என்று கேட்டபோது, தொடர்ந்து சபையை நடத்தினால்தான் மக்களுக்கு தைரியம் வரும், பீதி குறையும் என்று புத்திசாலித்தனமாக நினைத்து ஒரு விளக்கத்தை அளித்தது பழனிசாமி அன்ட் கம்பெனி.
சபையைத் தொடர்ந்து நடத்துகின்றீர்கள், இங்கே வரும் உறுப்பினர்களுக்கு மாஸ்க் கொடுங்கள் என சில உறுப்பினர்கள் கேட்டபோது, எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதில்லை. கொரோனா எல்லோரையும் தாக்காது. கடும் நோயினால் பீடிக்கப்பட்டவர்கள். 70 வயதுக்கு மேலானவர்களையே அது தாக்கும் என்று ஒரு அபத்தமான விளக்கத்தை முதலமைச்சரும் சுகாதாரத் துறை அமைச்சரும் சொன்னார்கள். அவர்களே சில வாரங்களில், எல்லோரும் முகக் கவசம் அணியுங்கள், அணியாமல் வெளியே வந்தால் அபராதம் என்று அறிவித்த அவலத்தையும் நாம் கண்டோம்.

edappadi-89

எல்லாவற்றையும் தானே செய்ததாக இருக்க வேண்டும், தனக்கே பெயர் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு நடந்துகொண்ட முதல்வரையும் நாம் கண்டோம். அந்த அதிகாரத் தடுமாற்றத்தாலோ என்னவோ, கொரோனா என்பது பணக்காரர்களுக்கான வியாதி, ஏழைகளுக்கு அது வராது என்பதில் ஆரம்பித்து இன்னும் மூன்று நாட்களில் கொரோனா தொற்றே இருக்காது என்ற அடிப்படை, ஆதாரமற்ற தகவல்களை மக்களுக்குத் தந்தார் பழனிசாமி. இந்த நாள்வரை நோய்த்தொற்று அதிகமாகி வருகிறதே ஒழியக் குறையவில்லை.
சுகாதாரத் துறை அமைச்சர் மட்டுமே டி.வி-யில் தலை காட்டுகிறாரே என்று நினைத்தோ என்னவோ அவரை சுமார் 15 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்ததையும் தமிழ்நாடு பார்த்தது. கொரோனா சிகிச்சைப் பணியிலிருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்தியவர்கள்தான் இந்த ஆட்சியாளர்கள். விளைவு, 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 30 சுகாதாரப் பணியாளர்கள் இதுவரை கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

sanity-workers-78

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சொந்த உறவுகளை நெருங்கத் தயங்கும் நேரத்தில், அவர்களை நெருங்கி சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் மருத்துவர்கள். அவர்களில் ஒருவர் மரணம் அடைந்தபோது, அவரது உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய மக்கள் புரிதலின்றி எதிர்ப்பு தெரிவித்த உடன் அரசு எச்சரிக்கை அடைந்து அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதை செய்யத் தவறியதால், அடுத்தடுத்து இரண்டு மருத்துவர்களின் இறுதி அடக்கமும் வேதனை தரும் வகையில் நடந்தேறியதைக் கண்டோம்.
பழனிசாமி அரசின் உச்சபட்ச அலட்சியத்தால் மருத்துவர் சைமனின் உடல் அடக்கத்தின்போது நடந்த நிகழ்வுகள் அகில இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி, அதன் காரணமாக இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் அளவுக்கு போனதை நாம் கண்டோம்.
மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உடைகள் இல்லை என்ற கூக்குரல் கண்டுகொள்ளப்படாத நிலையில், அவர்கள் அணிய வேண்டிய பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததைக் கொண்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு வருவாய் வரும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுவிட்டு, அதற்கு முன்பாக ஏப்ரல் 20ம் தேதி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்தது ஏற்புடையதா?

corona-checking-89

பத்திர எழுத்தாளர்கள் அலுவலகம், டிடிபி, ஜெராக்ஸ் கடைகளை மூடிவிட்டு பத்திரப்பதிவை எப்படி நடத்த முடியும்? இப்படி செய்வது அறிவார்ந்த செயலா? தினசரி 15 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடக்க வேண்டிய நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 100 பதிவுகள் கூட நடப்பதில்லை. ஊரடங்கு நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களைத் திறக்க வேண்டிய மர்மம் என்ன? 
அரசியல் நடத்தாதீர்கள் என்று மற்ற கட்சிகளைப் பார்த்து சொல்லிவிட்டு, அம்மா உணவகங்களுக்கு நிதி தருகிறோம், நாங்களே நடத்துகிறோம் என்றெல்லாம் ஆளுங்கட்சியினர் செய்துவரும் அத்துமீறலையும் அறிவீர்கள்.
இதற்கு சற்றும் சளைக்காமல் எதிர்க்கட்சி தரப்பில், எரிகிற வீட்டில் எதைப்பிடுங்கினால் ஆதாயம் என்று பார்ப்பது போல, ஊரடங்கின் காரணமாக அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் இந்த நேரத்தில், ஒன்றிணைவோம் என்று சொல்லி அழைப்பு விடுக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்வது?

edapaadi-palanisamy-258

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் போடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறேன் என்று ஒரு தலைவரே நேரில் போவது எல்லாம் என்ன நாடகம்? மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர் செய்கிற வேலையா இவையெல்லாம்? திருமண வீட்டில் மணமகனாக இருக்க வேண்டும், துக்க வீட்டில் பிணமாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் இயல்பாக இருக்கலாம். ஆனால், இந்த பேரிடம் காலத்திலாவது அந்த குணத்தை தள்ளிவைக்கக் கூடாதா என்று மக்கள் மத்தியில் எழுகிற கேள்வியிலும் நியாயம் இல்லாமல் இல்லை.
இந்த அபத்தங்கள், அவலங்கள், எதைப் பற்றியும் கவலைப்படாமல், என் வேண்டுகோளை ஏற்று ஊரடங்கின் முதல் கட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு  நிர்வாகிகள், தொண்டர்கள் உதவிகள் செய்தார்கள். ஊரடங்கு தொடர்கின்ற இந்த சூழலில் உங்களின் உதவிகள் தொடரட்டும். ஒவ்வொரு தொண்டரும் குறைந்தது ஓர் ஏழைக் குடும்பத்தையாவது அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த துயரிலிருந்து மீண்டுவர கைகொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.