மருத்துவமனையாக மாறும் திருமண்டபங்கள்! ஒரு மாதத்துக்குள் 50,000 படுக்கைகள் தயாராகிவிடும்- சென்னை மாநகராட்சி

 

மருத்துவமனையாக மாறும் திருமண்டபங்கள்! ஒரு மாதத்துக்குள் 50,000 படுக்கைகள் தயாராகிவிடும்- சென்னை மாநகராட்சி

ஒரு மாதத்துக்குள் 50,000 படுக்கைகளை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இதுவரை 4000 படுக்கை பகுதிகள் தயாராக உள்ளது. மாநகராட்சி பள்ளிகள், அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது.   மொத்தம் 50000 ஆயிரத்தில் முதல் 25000 படுக்கைகளுக்கு அரசு உயர் கல்வி நிறுவனங்கள், அடுத்து 25000 படுக்கைகள் அரசுப்பள்ளிகள் பின்னர் தனியார் பள்ளிகள் என படிப்படியாக செல்ல உள்ளோம். அடுத்து சென்னையில் உள்ள கல்யாண மண்டபங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சென்னையில் 747 கல்யாண மண்டபங்கள் உள்ளது. அவை அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தேசிய பேரிடர் சட்டத்தின்கீழ் அதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதை அவர்களுக்கு தெரிவித்து விட்டோம், ஏனென்றால் இது தேசிய அவசர நிலை காலம்.

சென்னை மாநகராட்சி

கல்யாண மண்டபம் கிடைத்தவுடன் முதல்வேலையாக அங்கு படுக்கைகள் சேமிக்கத்தொடங்கி விடுவோம், இப்போதைக்கு 4000 படுக்கைகள் தயாராக உள்ளது. அடுத்த வாரம் 10 ஆயிரம், ஒரு மாதத்துக்குள் 50 ஆயிரம் படுக்கைகள் தயாராகிவிடும். படுக்கை வசதிகள் தயார் செய்து கொடுப்பதுடன், கழிப்பறை, தங்குமிடம், உணவு ஆகியவையும் மாநகராட்சி சார்பாக செய்துகொடுக்கப்படும். அதன்பின் பொது சுகாதாரத்துறை அங்கு அவர்களது வேலையை பார்த்துக் கொள்வார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.