மய்யத்துடன் கூட்டணி அமைத்த இந்திய குடியரசுக் கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு!
நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
சென்னை: நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
மக்களவை தேர்தல்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடித்து தொகுதி பங்கீட்டையும், வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது.
களப்பணியில் கமல்ஹாசன்
அந்த வகையில் கடந்த ஆண்டு கட்சி தொடங்கி தீவிரமாக களப்பணியாற்றி வரும் கமல்ஹாசன், வருகின்ற மக்களவை தேர்தலில் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என அறிவித்தார். இதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் நேர்காணலும் நடைபெற்று வருகிறது.ஆனால் முதன்முறையாகத் தேர்தலில் களம் காணும் மக்கள் நீதி மய்யம் யாருடனும் கூட்டணி குறித்து அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தது.
மக்கள் நீதி மய்யம் கூட்டணி
இந்திய குடியரசுக் கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்தது.#MakkalNeedhiMaiam pic.twitter.com/8US1fRPBTw
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 19, 2019
இந்நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மக்கள் நீதி மய்யத்தில் இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய குடியரசுக் கட்சி பேட்டரி டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சே.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் பட்டியல்
முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கமல் ஹாசன் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.