மனைவியை கொலை செய்ய குடும்பத்துடன் திட்டம் தீட்டிய கணவன்: பூங்காவுக்கு அழைத்து சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம்!

 

மனைவியை கொலை செய்ய குடும்பத்துடன் திட்டம் தீட்டிய கணவன்: பூங்காவுக்கு அழைத்து சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம்!

குடும்பத்தின் துணையுடன் மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை: குடும்பத்தின் துணையுடன் மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த ராஜேஷ்- சரண்யாவிற்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில், ராஜேஷ் பல்வேறு வழக்குகளில், சிறை சென்று வந்துள்ளார். சரண்யா மற்றும் அவரது குழந்தைகளை  சரண்யாவின் தாயார் கவனித்து வந்துள்ளார். இதனால்  கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக சரண்யாவிற்கும் மாமியார் மற்றும் நாத்தனார்களுக்கிடையே  தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை சிறையில் இருந்து ராஜேஷ் வெளியே வந்துள்ளார். பின்னர், மனைவியை கொலை செய்ய குடும்பத்துடன் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி திருவான்மியூர் சிவசுந்தர் அவென்யூவில் உள்ள பூங்காவிற்கு, தனது இரு குழந்தைகளுடன் மனைவி சரண்யாவையும் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு ஏற்கனவே திட்டம் போட்டு, ராஜேஸின் தாயார் வேளாங்கண்ணி, நாத்தனார் கவிதா, அனிதா மற்றும் அவரது கணவர் பிரபு உள்ளிட்ட 8 பேர் அரிவாளால் சரண்யாவை தாக்கியுள்ளனர். இதில் சரண்யா நிலை குலைந்து கீழே சரிந்து விழுந்துள்ளார்.

சரண்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தற்போது சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான சரண்யாவின் கணவர், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட எட்டு பேரை திருவான்மியூர் போலீசார்  கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.