“மத வழிபாட்டு தலங்களுக்கு கூடி வருவதற்கான நேரம் இதுவல்ல!” – ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்
மத வழிபாட்டு தலங்களுக்கு கூட்டமாக வருவதற்கான நேரம் இதுவல்ல என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: மத வழிபாட்டு தலங்களுக்கு கூட்டமாக வருவதற்கான நேரம் இதுவல்ல என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு இந்தியாவை ஆட்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “இந்த செய்தி, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் க்ளினிக்குகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற தன்மைக்கும் நன்றி தெரிவிப்பதாகும். இந்த பயங்கரமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. நம்முடைய உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.
This message is to thank the doctors, nurses and all the staff working in hospitals and clinics all around India, for their bravery and selflessness… pic.twitter.com/fjBOzKfqjy
— A.R.Rahman (@arrahman) April 1, 2020
உலகத்தை தலைகீழாக மாற்றிய இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம் இது. மனிதநேயம் மற்றும் ஆன்மீகத்தின் அழகை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இது. நமது அண்டை, மூத்த குடிமக்கள், வறிய மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.
கடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார் (அது தான் மிகவும் புனிதமான சன்னதி), எனவே மத வழிபாட்டு தலங்களுக்கு கூடிவருவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல. அரசாங்கத்தின் ஆலோசனையைக் கேளுங்கள். சில வாரங்களுக்கான சுய தனிமை உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கான வாழ்க்கையை கொடுக்கலாம். உங்கள் மூலமாக கொரோனாவை பரப்பும் கருவியாக இருக்காதீர்கள் மற்றும் சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். இந்த நோய் உங்களுக்கு வருவதற்கு முன் எந்த எச்சரிக்கையும் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று கருத வேண்டாம். தவறான வதந்திகளை பரப்புவதற்கும், அதிக கவலை மற்றும் பீதியை ஏற்படுத்துவதற்கும் இது நேரம் அல்ல. சிந்தனையுடன் இருப்போம். பல லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை நம் கையில் உள்ளது” என்றார்.