மத்தியில யார் ஆண்டா என்ன..? தமிழகத்துல ஆட்சி நீடிக்குமா? மடியுமா?

 

மத்தியில யார் ஆண்டா என்ன..? தமிழகத்துல ஆட்சி நீடிக்குமா? மடியுமா?

தேர்தலுக்குப் பிறகு மத்தியில் யார் ஆட்சி அமையும் என்ற ஆர்வம் ஒருபுறமிருக்க, தமிழகத்தில் ஆட்சி நீடிக்குமா, மாறுமா என்ற புதிர் பெரிதாக இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் பலம் 234. அதில் தற்போது அதிமுகவின் பலம் 113, சபாநாயகர் 1. திமுக 88, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1. சுயேச்சையாக தினகரன் ஒரு இடம். இதில் அதிமுக தரப்பைப் பார்க்கும்போது, அறந்தாங்கி ரத்தினசபாபதி, ‌கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களது பதவியைப் பறிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அடுத்த மூவராக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் அதிருப்தி அணியாகவே கருதப்படுகின்றனர். இதனால், 113 இடங்களில் 6 இடங்கள் போக மீதி 107. சபாநாயகரையும் சேர்த்தால் 108. பெரும்பான்மைக்குத் தேவை 118. எனவே, 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 10 இடங்கள் பெற்றால் பிரச்னையே இருக்காது. 

அடுத்த வாய்ப்பாக, கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் எதிர்த்து வாக்களித்தால் பதவி பறிபோகும் என்பதால், ஆதரவாக வாக்களிப்பதாக வைத்துக் கொண்டால், அதிமுக 7 இடங்கள் வென்றால் போதுமானதே. மூன்றாவது வாய்ப்பாக, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 அதிமுக எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டாலோ அல்லது சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையோ ஏற்பட்டால், இடைத்தேர்தலில் அதிமுக 4 இடங்களில் வென்றாலே ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும். மேலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலில் காங்கிரசின் வசந்தகுமார் வெற்றி பெற்றால், எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்ய வேண்டுமென்பதால், அவையின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து, பெரும்பான்மைக்கு 117 ஆக எண்ணிக்கை குறையும். 

அதேநேரத்தில் திமுக அணிக்கு இப்போது‌ 97 இடங்கள் உள்ள நிலையில், இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்றால் அதன் எண்ணிக்கை 119 ஆக உயரும். அதன் மூலம், அதிமுக ஆட்சி பெரும்பான்மையிழந்து, அடுத்த 2 ஆண்டுகளுக்கு திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும். இந்தியா டுடே கருத்துக்கணிப்பை பார்த்தால் அந்த சூழலே ஏற்படும் என்பது தெளிவாக தெரிகிறது.