மது பாட்டில்களை பால் கேன்களில் கடத்த முயன்ற பலே ஆசாமி….. கைது செய்த டெல்லி போலீசார்

 

மது பாட்டில்களை பால் கேன்களில் கடத்த முயன்ற பலே ஆசாமி….. கைது செய்த டெல்லி போலீசார்

டெல்லியில் மது பாட்டில்களை பால் கேன்களில் கடத்த முயன்ற உத்தர பிரதேச ஆசாமியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் அவர்களை காட்டிலும் குடிகாரர்களின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருப்பது போல் தெரிகிறது. மது கிடைக்காததால் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மதுகடைகளில் திருட்டு முதல் சமையல் கியாஸ் சிலிண்டர்களில் மதுபாட்டில்களை மறைத்து வைத்தது என பல சுவராஸ்யமான செய்திகள் வெளியே வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது பால்கேன்களில மது பாட்டில்களை கடத்த முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மதுபான கடை

புதுடெல்லியில் சவுத் அவென்யூ பகுதியில் போலீஸ் சோதனை தடுப்பு உள்ளது. இரு சக்கர வாகனத்தில் பால் கேன்களுடன் வந்த ஒருவர் அந்த போலீஸ் சோதனை சாவடி பகுதியில் வேகமாக சென்றார். இது அங்கு இருந்த போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் விரட்டி சென்று பைக்கில் சென்றவரை பிடித்தனர். பின் அவரது பால்கேன்களை சோதனை செய்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

பிடிபட்ட பாபி சவுத்ரி

அந்த கேன்களில் 750 மி.லி. கொண்ட மொத்தம் 7 மதுபாட்டில்கள் (அதில் ஒன்று உடைந்து இருந்தது) இருந்தன. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் அவர் உத்தர பிரதேசம் புலந்த்ஷாரில் வசிக்கும் பாபி சவுத்ரி என தெரியவந்தது. பாபி சவுத்ரி மீது  தொற்று நோய் சட்டம், டெல்லி கலால் சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.