மதுவிலக்கு போராளி நந்தினியின் சகோதரி கைது!

 

மதுவிலக்கு போராளி நந்தினியின் சகோதரி கைது!

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நந்தினியை விடுவிக்கக்கோரி  உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்த அவரது சகோதரி நிரஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை:  நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நந்தினியை விடுவிக்கக்கோரி  உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்த அவரது சகோதரி நிரஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மது ஒழிப்பினை அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தொடர்ந்து பல நாட்கள் அமைதி முறையில் தனது தந்தையின் துணையுடன் பலமுறை போராடினார். 2014ல், நந்தினியும், அவரது தந்தையும், துண்டுப் பிரசுரம் வழங்கியதையடுத்து  அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில்  வெளிவந்தார்.இந்த வழக்கு விசாரணை கடந்த 27ஆம் தேதி    திருப்பத்துார் நீதிமன்றத்தில் நடந்தது.  அப்போது நந்தினியும் அவரது தந்தையும்  போலீசாரை கேள்வி எழுப்பி வந்தனர்.  அப்போது வழக்கிற்குச் சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்க வேண்டாம் என, மாஜிஸ்திரேட் சாமுண்டீஸ்வரி பிரபா அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் மதுபானம் உணவுப் பொருளா? என்று கூறி கூச்சலிட்டதாகத் தெரிகிறது. 

nandhini

இதனால் நந்தினி மற்றும் அவரது தந்தை இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து ஜூலை, 9 வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இருவரையும், மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தது குறிப்பிடத்தக்கது. 

சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகிவிட்ட நந்தினிக்கும் , விரைவில்  தனது பள்ளி கால  நண்பர் குணா ஜோதிபாசுக்கும்    ஜூலை 5ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில்,   நந்தினி கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

nandhini

இந்நிலையில், நந்தினியின் தங்கையும் மதுரை சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா, தனது சகோதரி மற்றும் தந்தையை விடுவிக்க வேண்டும் என்று கல்லூரி முன்பு இன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதற்காக அவர் தயாராகி கொண்டிருந்த வேளையில் மதுரையில் நந்தினி வீட்டிற்கு வந்த போலீசார் அவரது தங்கையை கைது செய்தனர்.