மதுரையில் விசாரணை கைதி மர்ம மரணம்

 

மதுரையில் விசாரணை கைதி மர்ம மரணம்

கஞ்சா விற்பனை செய்வதாக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை: கஞ்சா விற்பனை செய்வதாக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சின்ன வெள்ளையன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் ரூ.26,000 ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த  சின்ன வெள்ளையன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்தது மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.