மசூதியில் பெட்ரோல் குண்டு வீச்சு… இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்கு! – பதற்றத்தில் கோவை
கோவையில் சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க-வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணியை நடத்தியது. இதே போல் வேறு சில இந்து அமைப்புகளும் தொடர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மதுக்கரை ஆனந்த் என்பவர் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோவையில் தொடர்ந்து மத ரீதியான வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கோவையில் சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க-வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணியை நடத்தியது. இதே போல் வேறு சில இந்து அமைப்புகளும் தொடர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மதுக்கரை ஆனந்த் என்பவர் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நஞ்சுண்டாபுரம் சாலையில் வந்துகொண்டிருந்த அவர் மீது மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் அறிந்து ஏராளமான இந்து முன்னணியினர் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கோவை வேதம் பால் நகரில் உள்ள மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் கோவையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
பா.ஜ.க – இந்து முன்னணி தொண்டர்கள் தாக்குதல் காரணமாக ஆனந்தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதால் தாக்கப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க மாவட்டம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.