மக்கள் நடந்துகிறதை பொறுத்துதான் ஊரடங்கு வாபஸ்…. செக் வைச்ச உத்தவ் தாக்கரே…..
அரசின் உத்தரவுகளுக்கு மக்கள் எப்படி இணங்கி நடக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது மகாராஷ்டிரா. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க அம்மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அங்கு நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது: அரசின் உத்தரவுகளுக்கு மக்கள் இணங்கி நடப்பதை பொறுத்து ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீக்கப்படுவது அமையும். கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை மாநிலத்தில் எந்தவொரு மத மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது.
சமூக வலைதளங்களில் வகுப்புவாத பிளவுப்படுத்தும் செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் உத்தவ் தாக்கரேவின் தகவலை வைத்து பார்க்கும்போது மகாராஷ்டிராவில் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தொடரலாம் என தெரிகிறது.