மகாராஷ்டிராவில் சிக்கிய தமிழர்களை மீட்க  ஒப்புதல் கிடைத்துவிட்டது… எடப்பாடி நடவடிக்கை எடுத்தால் போதும்! – ஸ்டாலின் அறிவிப்பு

 

மகாராஷ்டிராவில் சிக்கிய தமிழர்களை மீட்க  ஒப்புதல் கிடைத்துவிட்டது… எடப்பாடி நடவடிக்கை எடுத்தால் போதும்! – ஸ்டாலின் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயுடனும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடனும் பேசி ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. தமிழக அரசு அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுத்தால் போதும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயுடனும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடனும் பேசி ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. தமிழக அரசு அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுத்தால் போதும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மகாராஷ்டிரா மாநிலத்தில் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வருவது பற்றி மகாராஷ்டிரா முதல்வரிடமும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடமும் திமுக சார்பில் ஆலோசித்துள்ளோம். அவர்களும் அனுப்பிவைக்கத் தயாராக உள்ளனர். தமிழக முதல்வர் காலம் தாழ்த்தாமல் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

tamils-in-maharashtra

மகாராஷ்ட்ராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி ஆலோசனை மூலமாக, அவர்கள் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் என்பது தெரிந்தது.

இதுகுறித்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் தி.மு.க.,வின் தலைவர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் தெரிவித்தேன். கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும் மகாராஷ்டிரா முதலமைச்சரிடம் கலந்தாலோசித்துள்ளார்.
தமிழகத் தொழிலாளர்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப தங்களின் அரசு தயாராக இருக்கிறது என்று உத்தவ் தாக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடமும் டி.ஆர்.பாலு அவர்கள் விவரத்தைத் தெரிவித்துள்ளார்.

piyush-goyal

மத்திய அரசும் சிறப்பு ரயில் மூலம் மகாராஷ்ட்ராவிலிருந்து தமிழகத்திற்குத் தொழிலாளர்களை அனுப்பத் தயாராக உள்ளது. தமிழக அரசுத் தரப்பிலிருந்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அந்தத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வார்கள்.
தமிழகத் தொழிலாளர்களை மகாராஷ்ட்ராவிலிருந்து திரும்ப அழைத்து வரவேண்டும் என்பது குறித்து பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் அழைத்துவர சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ராவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழக அரசு காலம் தாழ்த்தாது மத்திய அரசிடமும் மகாராஷ்ட்ரா மாநில அரசிடமும் தொடர்புகொண்டு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத் தொழிலாளர்களுக்கான பயணச் செலவிற்கான பொறுப்பினையும், அவர்களுக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விரைந்து மீட்டு, அழைத்து வருமாறு ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.