மகளைக் கொலை செய்ய அனுமதி வேண்டும்?! நீதிமன்றத்தை அதிர வைத்த பெற்றோர் !?

 

மகளைக் கொலை செய்ய அனுமதி வேண்டும்?! நீதிமன்றத்தை அதிர வைத்த பெற்றோர் !?

தவமிருந்து பெற்ற மகளை கொலை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற படிகளில் ஏறி அதிர வைத்திருக்கிறார்கள்

தவமிருந்து பெற்ற மகளை கொலை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற படிகளில் ஏறி அதிர வைத்திருக்கிறார்கள் ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியர்கள். ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவாஜன் மற்றும் ஷப்னா தம்பதி. சந்தோஷமாய் சென்றுக் கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் கடவுள் குழந்தை வரமளித்து மேலும் சந்தோஷப்படுத்தினார். அழகான பெண் குழந்தைப் பிறந்ததும் தம்பதியினர் மேலும் உற்சாகமடைந்து கண்ணும் கருத்துமாக குழந்தையைப் பார்த்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் குழந்தைக்கு ஹைப்போ க்ளைசிமியா  எனும் ரத்தச் சர்க்கரை குறைபாடு நோய் தாக்கியுள்ளது. தற்போது 1 வயதாகும் குழந்தை இந்த நோயினால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறது. மிகவும் அரிய வகை நோய் என்பதால் மருத்துவச் செலவு மிக அதிகமாகிறது. 

தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வரும் பவாஜன், இதுவரை குழந்தையின் மருத்துவ செலவுகளுக்காக வீட்டில் இருந்த நகைகள், சொத்துகளை எல்லாம் விற்று, ரூ12 லட்சம் வரை செலவுகள் செய்திருக்கிறார். மேலும் தொடரும் மருத்துவச் செலவுகளுக்கு பணம் புரட்ட முடியாமல் அவதிப்படுகிறார். எனவே, தங்களது மகளை கருணை முறையில் உயிரிழக்க செய்ய அனுமதிக்க கோரி பவாஜன் மற்றும் ஷப்னா தம்பதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் இவர்களது வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு இதே போல்  ஆந்திராவைச் சேர்ந்த மகேஷ் என்ற 5 வயது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் தாக்கியதால், அவனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி  தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சிகிச்சை காலத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.  கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான், சரியான காரணங்களுக்காக உயிரிழக்க செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.