போலீஸ் வேலை தேர்வில் மோசடி – தேர்வான 1000 பேரின் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது

 

போலீஸ் வேலை தேர்வில் மோசடி – தேர்வான 1000 பேரின் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது

போலீஸ் தேர்வில் மோசடி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 1000 பேருக்கு பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை: போலீஸ் தேர்வில் மோசடி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 1000 பேருக்கு பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. இதில் 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழக போலீஸ் துறை, தீயணைப்பு துறை, ஜெயில் துறை ஆகியவற்றுக்கான காவலர்களை தேர்வு செய்யவே சீருடை பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது. இந்த 3 துறைகளிலும் போலீஸ் கான்ஸ்டபிள், தீயணைப்பு வீரர்கள், ஜெயில் வார்டன்கள் பிரிவில் 8 ஆயிரத்து 888 பணியிடங்கள் காலியாக இருந்தன. அதற்கான தேர்வுதான் கடந்தாண்டு நடத்தப்பட்டது. தற்போது அந்த தேர்வில் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 15 மையங்களில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டு 47 ஆயிரம் பேர் அதில் வெற்றி பெற்றார்கள். இதையடுத்து, இறுதியாக 8 ஆயிரத்து 800 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த 3 பணிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கென 10 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை பெற வேண்டுமெனில் முக்கிய விளையாட்டுகளில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஆனால், ஏராளமானோர் தகுதியற்ற சான்றிதழ்களை வழங்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் சிலர் போலி சான்றிதழ்களை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஆயிரம் பேருக்கு மேல் தகுதியற்ற மற்றும் போலி சான்றிதழ்களை வழங்கி இருப்பதால் அவர்களுக்கு பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 200 பேர் கட்-ஆஃப் மார்க் அடிப்படையில் மற்ற பிரிவிலேயே வேலைக்கு சேரும் தகுதி பெற்றிருப்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் மீதியுள்ள 800 பேருடைய சான்றிதழ் தகுதியற்றது என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு வேலை மறுக்கப்படும். அத்துடன் தவறான சான்றிதழ் அல்லது போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர முயற்சி செய்தது கண்டறியப்பட்டால் அது மோசடி குற்றமாக கருதப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.