போலீஸ் ஏட்டு சரக்கு ஊத்திக் கொடுத்ததால் போதையில் உளறி விட்டேன் – சிறையில் போலீசாரிடம் புல்லட் நாகராஜன் கெஞ்சல்!

 

போலீஸ் ஏட்டு சரக்கு ஊத்திக் கொடுத்ததால் போதையில் உளறி விட்டேன் – சிறையில் போலீசாரிடம் புல்லட் நாகராஜன் கெஞ்சல்!

வேலூர்: போலீஸ் ஏட்டு ஒருவர் சரக்கு ஊத்திக் கொடுத்ததால் போதையில் போனில் உளறியதாக சிறையில் போலீசாரிடம் பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் சோகமாக கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் ‘புல்லட்’ நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் சிறையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வந்த பெண் மருத்துவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அதனால் சிறை போலீசார் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது.

இந்த விவகாரம் புல்லட் நாகராஜூக்கு தெரியவர அவர் சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டினார். அதேபோல், மற்றொரு பெண் காவல் ஆய்வாளரையும் தொடர்பு கொண்டு புல்லட் நாகராஜ் மிரட்டினார். இந்த இரண்டு ஆடியோ பதிவுகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ரவுடி புல்லட் நாகராஜை நேற்று போலீசார் கைது செய்தனர். புல்லட் நாகராஜை போலீஸார் கைது செய்ய முயன்றபோது அவர் தப்பிக்க முயன்றார். அப்போது புல்லட் நாகராஜை பின்னந்தலையில் அடித்து போலீசார் ஜீப்பை நோக்கி இழுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

 TN 39 BC 8472 என்பது நாகராஜின் இருசக்கர வாகன நம்பர் ஆகும். ஊரை விட்டு ஓடியவர் பைக்கை மாற்றாமல் அதே பைக்கில் பெரியகுளத்தில் சுற்றி இருக்கிறார். வண்டி நம்பரை வைத்து போலீசார் அவரை பிடித்துள்ளனர். இந்நிலையில், 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜன் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு இரவு 7 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் மற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விசாரணை கைதிகள் உள்ளனர்.

 

மதுரை சிறை போலீஸ் சூப்பிரண்டை மிரட்டியதால் புல்லட் நாகராஜன் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்படாமல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 70 வழக்குகள், போலீஸ் அதிகாரியையே மிரட்டியவர் என்பதால் மற்ற கைதிகள் புல்லட் நாகராஜனை மிரட்சியுடன் பார்த்துள்ளனர். ஆனால், புல்லட் நாகராஜன் மிகவும் சோகத்துடன் இருந்தார்.

மேலும், தன்னுடன் பழக்கத்தில் உள்ள போலீஸ் ஏட்டு ஒருவர் சரக்கு ஊத்திக் கொடுத்து போதை ஏற்றி விட்டு பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுக்க வைத்து மாட்டிவிட்டு விட்டதாக கூறியுள்ளார். மது போதையில் போலீஸ் அதிகாரியையும், இன்ஸ்பெக்டரையும் வாட்ஸ்அப்பில் பேசி மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் போலீஸ் அடியில் இருந்து தப்பிப்பதற்கு ரவுடி புல்லட் நாகராஜன், மது போதையில் ஏட்டு பேசி சிக்க வைத்து விட்டதாக கூறி நாடகம் ஆடுகிறாரா? அவருடன் தொடர்பில் உள்ள போலீஸ் ஏட்டு யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.