போலீஸிடம் சிக்கிக்கொண்டதால் போலீஸ் வாகனத்திலேயே விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி!

 

போலீஸிடம் சிக்கிக்கொண்டதால் போலீஸ் வாகனத்திலேயே விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி!

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் புளியம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (42). திருமணமாகி விட்டது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கவிதாமணி (32). என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவிதாமணிக்கும் வேறொருவருடன் திருமணமாகி இருந்தது. ஆனாலும் ஜெயக்குமாருடன் ஒன்றாக பழகி வந்தார். இருவரது குடும்பத்தினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்தனர். கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சிவசக்தி நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இருவரது உறவினர்களும் ஊரைவிட்டு ஓடிய கவிதாமணி, ஜெயக்குமார் குறித்து ஈரோடு நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை வந்த நம்பியூர் போலீசார் நெற் குன்றத்தில் தங்கியிருந்த ஜெயக்குமாரை பிடித்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கவிதாமணி இருப்பதாக தெரிவித்ததையடுத்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் கவிதாமணியை போலீசார் பிடித்தனர். இருவரையும் இன்று காலை போலீசார் தங்களது வாகனத்தில் புளியம்பட்டிக்கு அழைத்துச் சென்றனர்.

இருவரும் ஊருக்கு சென்றால் உறவினர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் தங்களது தவறான காதல் பிரிந்து விடுமோ என்ற பயத்தில் இருவரும் மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்தியுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தை கடந்து சென்ற போது இருவரும் விஷத்தை குடித்துள்ளனர். இதனை கண்ட போலீஸார் இருவரையும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமாரும் கவிதாமணியும் இறந்துவிட்டனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீசாருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவிதாமணிக்கு 13 வயதில் மோகன்குமார் என்ற மகனும், 8 வயதுடைய ரிதன்யா என்ற மகளும்  உள்ளனர்.