போலீசார் அலட்சியத்தால் நடந்த விபரீதம்: 3 வயது குழந்தை கண்முன்னே தாயை வெட்டி கொன்ற ரவுடி!

 

போலீசார் அலட்சியத்தால் நடந்த விபரீதம்: 3 வயது குழந்தை கண்முன்னே தாயை வெட்டி கொன்ற ரவுடி!

ரவுடி ஒருவனால், 28 வயது இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேளாங்கண்ணி: ரவுடி ஒருவனால், 28 வயது இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த வேலவன். இவரது மனைவி  சரண்யா. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சரண்யா பூ வியாபாரிகளுக்கு பூ கட்டி கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி திருட்டு குமார் என்கிற  கணேஷ்குமார்,  சரண்யாவுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதனால் சரண்யாவின் கணவருக்கும், திருட்டு குமாருக்கும் இடையே,தகராறு  ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சரண்யா மற்றும் அவரது கணவர் அளித்த புகாரை வேளாங்கண்ணி காவல்நிலைய போலீசார் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் திருட்டு குமாரிடமிருந்து  புகாரைப் பெற்று, சரண்யாவின் கணவரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

murder

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட  திருட்டுக் குமார், மீண்டும் சரண்யாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததோடு, நான்குசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியிருக்கிறான். இதையடுத்து சரண்யா  தனது குழந்தை மற்றும் மாமியாரை அழைத்துக்கொண்டு வேளாங்கண்ணி போலீசில் மீண்டும் புகார் அளித்தார். ஆனால் போலீசாரோ, திருட்டுக்குமார் வந்தால் மிளகாய் பொடியைத் வீசுமாறு, அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர். இதற்கிடையே, சிறையிலிருந்து வெளியே வந்த சரண்யாவின் கணவர் ஆனந்த வேலவனிடம், ரவுடி திருட்டு குமார் தகராறு செய்திருக்கிறான். இதுதொடர்பாக மீண்டும் போலீசாரிடம் கூறியும், அவர்கள் அலட்சியமாகவே இருந்துள்ளனர். 

murder

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று, கணவன் வீட்டில் இல்லாத சமயத்தில், சரண்யாவின் வீட்டிற்குள், ரவுடி திருட்டு குமார் புகுந்துள்ளான். இதை கண்ட சரண்யா, தனது 3 வயது மகனுடன் அலறி அடித்து தெருவில் ஓடியுள்ளார். அவரை துரத்திச் சென்ற  திருட்டுக்குமார், முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தான்.

கொலை செய்து விட்டு  எங்கும் தப்பிச் செல்லாமல், தனது வீட்டில் சர்வ சாதாரணமாக ரவுடி திருட்டு குமார் இருந்துள்ளான். சம்பவத்தைக் கேள்விப்பட்டு, வந்த வேளாங்கண்ணி போலீசார், இளம்பெண்ணைக் கொடூரமாகக் கொன்ற ரவுடியை கைது செய்தனர். 

murder

இது குறித்துக் கூறியுள்ள நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்,  ‘திருட்டு குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் அலட்சியமாக இருந்தது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

சரண்யாவும் அவரது கணவரும் தொடர்ந்து போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டும் போலீசார் அவர்களது புகாரை ஏற்க மறுத்து அலட்சியம் செய்துள்ளதே இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று அப்பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.