போலி கிரெடிட், டெபிட் கார்டு மூலம் சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர்களின் லட்சக்கணக்கான பணம் அபேஸ்

 

போலி கிரெடிட், டெபிட் கார்டு மூலம் சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர்களின் லட்சக்கணக்கான பணம் அபேஸ்

சென்னை பெருங்குடியில் உள்ள தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் பணியாற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் கணக்கிலிருந்து பிகாரைச் சேர்ந்த கும்பல் ஒன்று போலி கார்டு மூலம் லட்சக்ணக்கில் பணத்தைத் திருடியுள்ளது

சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் பணியாற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் கணக்கிலிருந்து பிகாரைச் சேர்ந்த கும்பல் ஒன்று போலி கார்டு மூலம் லட்சக்ணக்கில் பணத்தைத் திருடியுள்ளது.

இந்த ஊழியர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸில் அவர்கள் புகார் கொடுத்தனர். புகாரை அடுத்து குற்றப் பிரிவு போலீசார் நடத்திய விசாரனையில், பழச்சாறு கடை, உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் ஐ.டி.ஊழியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடுவதற்கு என்றே தயாரிக்கப்பட்ட கருவிகள் மூலம் பணம் களவு போனதை போலீசார் கண்டு பிடித்தனர்.

பிகாரைச் சேர்ந்த 9 பெர் கொண்ட மோசடி கும்பல், சிறப்புக் கருவிகள் மூலம் கார்டு விவரங்களைத் திருடி கோல்கத்தாவில் இருக்கும் கூட்டாளிகள் மூலம் போலிக் கார்டுகள் தயாரித்து, பணத்தைத் திருடி உள்ளதை கண்டு பிடித்து உள்ளனர். இதையடுத்து அந்த 9 பேரையும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து அவர்களைத் தனித் தனியாக விசாரனை செய்தனர். 
இதில், கோல்கத்தாவில் இருக்கும் கூட்டாளிகள் மூலம் போலியாக கார்டுகள் தயாரித்து, சென்னை ஐ.டி.ஊழியர்களிடம் இருந்து சுமார் 20 லட்சம் வரை பணம் எடுத்துள்ளனர். இந்த பணத்தை வைத்து பிகாரில் வீடு, நிலம் என சொகுசு வாழ்க்கைக்கு தயாராகி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அது மட்டுமின்றி திருடப்பட்ட வங்கி விவரங்களை வங்கி மோசடி கும்பலுக்கு, ஒரு கார்டுக்கு தலா பத்தாயிரம் என்று விற்பனை செய்துள்ள அதிர்ச்சி விவரமும் தெரிய வந்துள்ளது. இந்த வங்கி மோசடி கும்பல் தில்லியில் இருப்பதாகவும் தெரிய வந்த நிலையில் இந்தியா முழுக்க பெரும் மோசடி வலையை விரிக்க உள்ள அந்த கும்பலை மாநில போலீசார் உதவியுடன் பிடிக்கவும் மத்திய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

பெருங்குடி மென்பொறியாளர்கள் சுமார் 200 பேரின் பணத்தை இவ்வாறு திருடியதாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டதை அடுத்து, வங்கிக் குறியீட்டு ரகசிய எண்களை மாற்றிக்கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளதோடு, கொள்ளையடித்த பணதை மீட்டுத் தரும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளனர்.

வங்கிக் கார்டுகளைப் பயன்படுத்துவோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் உஷார் படுத்தி வருகின்றனர்.