போர் வந்தால் என் கையிலோ, மோடி கையிலோ இருக்காது; பாக்.,பிரதமர் இம்ரான் கான்

 

போர் வந்தால் என் கையிலோ, மோடி கையிலோ இருக்காது; பாக்.,பிரதமர் இம்ரான் கான்

போர் நடந்தால் அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

இஸ்லாமாபாத்: போர் நடந்தால் அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்களின் இழப்புக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் இந்திய விமான படை எல்லையை கடந்து பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கியது. அதில், 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அறிவித்தது. ஆனால் பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.

இதற்கிடையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பிலும் தொடர்ந்து ஆயுத பிரயோகங்கள் நடைபெற்று வருகின்றன. எல்லை புறங்களில் விமானப்படை தாக்குதல்கள் இரு தரப்பிலும் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் விமானத்தை வீழ்த்தியதாக இந்திய ராணுவம் அறிவித்தது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை வீழ்த்தியுள்ளோம், இரண்டு விமானிகளை கைது செய்துள்ளோம் என்று அறிவித்திருக்கிறது. ஒரு விமானி திரும்பவில்லை என இந்திய அரசு உறுதி செய்துள்ளது.

சீனா போன்ற நாடுகள் இந்தியாவும், பாகிஸ்தானும் இந்தப்பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும். இரண்டுமே அணு ஆயுதம் தாங்கியிருக்கும் நாடுகள் என்பதால் தெற்காசிய பகுதி போர்க்களமாக மாறுவது உலக ஒழுங்கிற்கு நல்லதல்ல என்று அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் மூண்டால் அது இரு நாடுகளுக்குமே பேரிழப்பாக அமையும். போரினை தவிர்ப்பதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வருவது நல்லது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வாக இருக்கும். போரால் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது என தெரிவித்துள்ள அவர், போர் நடந்தால் அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ, மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தீவிரவாத தாக்குதல்களால் இந்தியாவும், பாகிஸ்தானும் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளன. புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவி செய்ய பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தையின் மூலமாக இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. பேசி தீர்ப்பது என்பதே சரியான தீர்வாக இருக்கும். இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.