போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப ஜாக்டோ-ஜியோ-வுக்கு முதல்வர் வேண்டுகோள்

 

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப ஜாக்டோ-ஜியோ-வுக்கு முதல்வர் வேண்டுகோள்

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்

சென்னை: போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்றுக்குள் பணிக்கு திரும்பாவிடில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அரசு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வந்தன.

இதையடுத்து, அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் 96 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களும், தொடக்க பள்ளி ஆசிரியர்களில் 79 சதவீதம் பேரும் பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எஞ்சிய ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

எனினும், முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு என்றுமே புறந்தள்ளியது கிடையாது. சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு பணியாற்றுவது நம் கடமை. தியாக உணர்வோடு, நம் உரிமைகளையும் சில நேரங்களில் விட்டுக் கொடுத்து பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடும் நிதிச்சுமைக்கிடையே ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முதல்வர், பொறுப்புகள் பெருஞ்சுமையாக இருக்கும் போது, உரிமைகள் பற்றி மட்டும் பேசுவது மக்கள் பணிக்கு பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் பணியை நாம் அனைவரும் ஒன்று பட்டு தொய்வின்றி தொடருவோம் எனவும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.