‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’… மதம் மாறியதாக வெளியான வதந்தியால் கடுப்பான விஜய் சேதுபதி
23 மணிநேரம் விஜய் வீட்டில் நடந்த சோதனை முடிவடைந்து விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள்,அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதேபோல் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். 23 மணிநேரம் விஜய் வீட்டில் நடந்த சோதனை முடிவடைந்து விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இதனிடையே வெளிநாட்டிலிருந்து பணத்தை வாரிவழங்கும் மதமாற்றக் கும்பல்களுக்குப் பின்புலத்திலிருந்து ஜேப்பியார் குழுமம் உள்ளது என்றும் இதில் அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள், பாதிரியார்கள் என பலர் உள்ளனர் என்றும் கூறப்பட்டது.
குறிப்பாக சினிமா துறையில் உள்ள நடிகர்கள் விஜய், ஆர்யா, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரபு சாலமன், இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டணி போன்றவர்கள் இதில் உள்ளதாகவும் , பாதிரியார்களை கொண்டு மூளைச்சலவை செய்யப்பட்டதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆர்த்தி கணேஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட சிலர் மதம் மாறியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
அதன்படி கடந்த நவம்பர் மாதம் ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான 32 இடங்களில் சோதனை செய்ததில் கிடைத்த ஆவணங்கள் காரணமாக தான் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
போயி வேற வேலை இருந்தா பாருங்கடா… pic.twitter.com/6tcwhsFxgT
— VijaySethupathi (@VijaySethuOffl) February 12, 2020
இந்நிலையில் வருமானவரித்துறையினரின் சோதனை குறித்து வெளியாகி வரும் இந்த வதந்திகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், போயி வேற வேலை இருந்தா பாருங்கடா…என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.