போன வருஷம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை முடக்கி வைத்த மத்திய, மாநில அரசுகள்…

 

போன வருஷம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை முடக்கி வைத்த மத்திய, மாநில அரசுகள்…

2019ம் ஆண்டில் ஜம்மு அண்டு காஷ்மீர், அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மொத்தம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை (இணைய சேவை) முடக்கி வைத்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கலவரங்கள் மற்றும் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் பரவமால் தடுக்க  முன்எச்சரிக்கை நடவடிக்கையாக  இன்டர்நெட்டை அரசுகள் முடக்கி வைக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் தனிநபர் சுதந்திரத்தில் பாதிப்பு ஏற்படும். மேலும், நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

இணையசேவை துண்டிப்பு

கடந்த ஆண்டில் (2019) ஜம்மு அண்டு காஷ்மீர், அருணாசலபிரதேசம், அசாம், மேகலாயா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் உள்பட நாட்டின் பல மாநிலங்களில் மொத்தம் 4,196 மணி நேரம் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி பொருளாதாரத்தை இந்தியா இழந்துள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவனமான டாப்10வி.பி.என். தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் முடக்கம்

மேலும், சர்வதேச அளவில் இணையசேவை துண்டிப்பால் பொருளாதாரத்தில் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஈராக் உள்ளது. அந்நாட்டு கடந்த ஆண்டில் 263 மணி நேரம் மட்டுமே இன்டர்நெட்டை முடக்கி வைத்திருந்தது. ஆனால் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. சூடான் 2வது இடத்தில் உள்ளது. அந்நாட்டு 1,560 மணி நேர இன்டர்நெட் முடக்கத்தால் சுமார் ரூ.13,500 கோடி அளவுக்கு பொருளாதாரத்தை தவற விட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது