போத்திக்கிட்டு படுத்துக்கலாம், படுத்துக்கிட்டு போத்திக்கப்டாதா? – எச்.ராஜா விஞ்ஞானபூர்வ கேள்வி!

 

போத்திக்கிட்டு படுத்துக்கலாம், படுத்துக்கிட்டு போத்திக்கப்டாதா? – எச்.ராஜா விஞ்ஞானபூர்வ கேள்வி!

கூட்டணி கட்சிக்கு தோள்கொடுக்க வீறுகொண்டெழுந்த எச்.ராஜா “கஞ்சி குடிக்கும்போது குல்லாய் போட்டுக்கலாம், ஆனால் காவித்துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா? வெட்கம்” என விளாசியிருக்கிறார்.

‘தேர்தல் முடிகிற வரைக்கும் கொஞ்ச நாளைக்கு சும்மா இருங்கள், எதையாவது பேசி, விழுகிற ஓட்டையும் கெடுத்துவிடவேண்டாம்’ என மேலிடத்திலிருந்தோ அல்லது அதிமுகவிலிருந்தோ எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டிருப்பார்கள் போலிருந்தது தேர்தல் நேரத்தில். கொஞ்சநாளைக்கு கங்காவா இருந்த ஹெச்.ராஜாவை திரும்பவும் யாரோ சீண்டிவிட்டுவிட்டார்கள், சந்திரமுகியாகி வருகிறார் சமீபமாக. அதுவும் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக வேறு இருக்கிறது. சாரணர் தேர்தல் மாதிரி ஓட்டுப்போட்டு ஜெயிக்கிறதுதான் எட்டாக்கனி. எனவே, தமிழக பாஜக தலைவர் மாதிரி நியமன பதவிகள் கிடைத்தால்தான் உண்டு, இல்லையென்றால் கடைசிவரை ட்விட்டரிலேயே அரசியல் வாழ்க்கை முடிந்துபோய்விடும் என்பதால், முடிந்தவரை இறங்கி ஆடுகிறார் எச்.ராஜா.

Ravindranath MP with saffron towel

அவருக்கு தீனி போடுவதுபோல் சம்பவங்களும் நடந்தேறுகின்றன. தேனி, சின்னமனூர் பகுதியில் இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற வினாயகர் சதுர்த்தி பேரணியில் கலந்துகொண்ட வருங்கால மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார் பேசுகையில் “முதலில் நாம் இந்து, அப்புறம்தான் மற்றதெல்லாம்” என பேசியிருந்தார். சும்மா இல்லை, கழுத்தில் காவித்துண்டு உடுத்தி. இது பலதரப்பிலிருந்தும் விமர்சனத்தை எழுப்பியிருந்தது. கூட்டணி கட்சிக்கு தோள்கொடுக்க வீறுகொண்டெழுந்த எச்.ராஜா “கஞ்சி குடிக்கும்போது குல்லாய் போட்டுக்கலாம், ஆனால் காவித்துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா? வெட்கம்” என விளாசியிருக்கிறார். கழுத்துல கயிறு தொங்குறதுக்கும், கழுத்து கயிறுல தொங்குறதுக்கும் வித்தியாசம் இருக்குதுங்களே ராஜா சார்!