போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்..குறைந்த அளவு பேருந்து இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி!
25 சதவீதம் ஊதிய உயர்வு, வேலைப்பளு திணிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள், 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, வரவு-செலவு குறித்த நிதிநிலை அறிக்கை, 25 சதவீதம் ஊதிய உயர்வு, வேலைப்பளு திணிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், தமிழகம் முழுவதிலும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திக் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் பொதுமக்கள், தேர்வெழுதும் மாணவர்கள் அவதிக்கு உள்ளாகியிருப்பர். அதனால் தான் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதனால் விரைவில் அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.
இதனிடையே அவர்களிடம் நடத்தப்பட்ட 3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் 33 பணிமனைகளிலிருந்தும் குறைந்த அளவில் மட்டுமே பேருந்து இயக்கப்படுவதால் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழக அரசு விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.