பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி பார் நாகராஜ் மதுபான கடையை அடித்து நொறுக்கிய மக்கள்!

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி பார் நாகராஜ் மதுபான கடையை அடித்து நொறுக்கிய மக்கள்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜின் மதுபான கடையை  பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜின் மதுபான கடையை  பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களை மிரட்டி அவர்களைப் பணிய வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள இந்த கும்பல் இப்படி 40ற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்துள்ளது. இதையடுத்து வசந்தகுமார், சபரி, திருநாவுக்கரசு, சதீஷ் ஆகிய  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன் பின்னணியில் ஆளுங்கட்சியினர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

POLLACHI TTN

இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து புகார் அளித்த பெண்ணின் அண்ணனை சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, பெண்ணின் அண்ணனை மிரட்டியதாகச் செந்தில், பாபு, வசந்தகுமார், நாகராஜ்  ஆகிய நான்கு பேர் கைதானார்கள். இதில் நாகராஜ் பொள்ளாச்சி 34-வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர். தாக்குதல் புகாரில் கைதான நான்கு பேருமே மூன்று நாள்களில் ஜாமீனில் வெளிவந்து விட்டனர். இதையடுத்து அதிமுக பிரமுகர் நாகராஜ் என்ற பார் நாகராஜ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

 

 

இந்நிலையில் பார் நாகராஜின் மதுபான பாருக்கு வந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பாரை அடித்து நொறுக்கியதோடு, மதுபானக் கடைக்கு அருகே கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

POLLACHI

முன்னதாக இவ்விகாரத்தைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்த நக்கீரன் ஆசிரியர் கோபால், ‘பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என்று கூறுகின்றனர். அப்படியானால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜன் யார்? பள்ளி குழந்தைகள் முதல்,  பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பார் நாகராஜனை விசாரித்தால் உண்மை வெளிவரும்’ என்று சூசகமாகக் கூறியுள்ளார்.