பொருளாளராக கெத்து காட்டிய துரைமுருகன்

 

பொருளாளராக கெத்து காட்டிய துரைமுருகன்

சென்னை: திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் கட்சிக்கு ரூ 1 கோடி நிதி திரட்டி கொடுத்துள்ளது அக்கட்சியினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திமுக முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் பொருளாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக பதவியேற்ற பிறகு பேசிய தனது முதல் உரையில், தி.மு.க.வுக்கு அதிக நிதி சேர்க்க வேண்டும். அதற்கு தி.மு.க.வினர் முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே தேர்தலை சந்திக்க தயாராகி வரும் திமுக, மாவட்ட கழகங்கள் சார்பில் தேர்தல் நிதி திரட்டும் பணியை தொடங்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனையடுத்து பொருளாளர் துரைமுருகன் அந்த பணியில் தீவிரம் காட்டினார்.
அதன்படி பொருளாளராக பதவியேற்ற பிறகு கடந்த 5-ம் தேதி வேலூர் சென்ற துரைமுருகனிடம் அந்த மாவட்டத்தின் கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்டங்கள் சார்பிலும், வேலூர் நகர திமு.க சார்பிலும் மாவட்ட செயலாளர்கள் ரூ.1 கோடி நிதியை வழங்கினர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது வேலூர் மாவட்ட திமுக. சார்பில் பொருளாளர் துரைமுருகனிடம் வழங்கப்பட்ட நிதியை பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம், துரைமுருகன் வழங்கினார். பொருளாளராக பதவியேற்ற சில நாட்களிலேயே ரூ 1 கோடியை கட்சிக்கு நிதி திரட்டிய துரைமுருகனின் செயல்பாட்டினை அக்கட்சியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
 

#duraimurugan #dmk #mkstalin