பொய்களின் குரு! எல்லா விஷயங்கள் குறித்தும் பேசுவார் ஆனால் ஒரு விஷயத்தில் அறிவு கிடையாது.. ராகுல் காந்தியை தாக்கிய பா.ஜ.க.

 

பொய்களின் குரு! எல்லா விஷயங்கள் குறித்தும் பேசுவார் ஆனால் ஒரு விஷயத்தில் அறிவு கிடையாது.. ராகுல் காந்தியை தாக்கிய பா.ஜ.க.

பொய்களின் குரு. அவர் எல்லா விஷயங்கள் குறித்தும் பேசுவார் ஆனால் ஒரு விஷயம் குறித்தும் அறிவு கிடையாது என ராகுல் காந்தியை பா.ஜ.க. கடுமையாக தாக்கியயுள்ளது.

ராகுல் காந்தி டிவிட்டரில், அசாம் தடுப்பு முகாம்கள் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரதமர் நரேந்திர மோடி பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார் என பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்ஹிட் பத்ரா செய்தியாளர்கள்  சந்திப்பின் போது கூறியதாவது: 

சம்ஹிட் பத்ரா

ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி தற்போது தடுப்பு முகாம்கள் குறித்து பொய்களை பரப்பி வருகிறார். தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் முடிந்த பிறகு இந்திய முஸ்லிம்கள் எந்தவொரு தடுப்பு முகாம்களிலும் வைக்கப்படமாட்டார்கள் என்று மட்டுமே பிரதமர் பேசினார். ராகுல் காந்தி பொய்களின் குரு. மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் அசாமில் 3 தடுப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.

மோடி

2011ல் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட அரசு அறிக்கை மற்றும் 2012ல் அசாமில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு வெளிநாட்டவர்கள் தொடர்பாக வெளியிட்ட வெள்ளை அறிக்கைகள்தான் அதற்கு ஆதாரம். மேலும் அந்த அறிக்கைகளை செய்தியாளர்கள் மத்தியில் காட்டினார்.  ராகுல் காந்தி எல்லா விஷங்கள் குறித்தும் பேசுவார் ஆனால் அவருக்கு ஒரு விஷயத்தில் கூட அறிவு கிடையாது. ராகுல் காந்தி ஒரு பொய்யர். ஆனால் மோடி ஒரு செயலாக்குபவர். டீ விற்பனை செய்தவர் பிரதமரானதை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.