பொம்பள சக்தி பொல்லாத சக்தி… அத்தையை அப்பாவுடன் சேர்ந்து ஓரம்கட்டும் உதயநிதி ரகசியம்..!

 

பொம்பள சக்தி பொல்லாத சக்தி… அத்தையை அப்பாவுடன் சேர்ந்து ஓரம்கட்டும் உதயநிதி ரகசியம்..!

அரசியலில் பெண் சக்தியின் பவர் எப்படியானது என்பதை ஜெயலலிதா மூலமாக துல்லியமாக அறிந்தவர் ஸ்டாலின்.

அரசியலில் பெண் சக்தியின் பவர் எப்படியானது என்பதை ஜெயலலிதா மூலமாக துல்லியமாக அறிந்தவர் ஸ்டாலின். அதனால்தானோ என்னவோ சொந்த தங்கையான கனிமொழியை தன் கட்சியில் வளர விட வாய்ப்புத் தர மறுக்கிறார் என தி.மு.க. தலைவருக்கு எதிராக மிக கடுமையாகவே விமர்சனங்கள் உட்கட்சி மகளிர் அணியிலிருந்து வெடிக்க துவங்கியுள்ளன.

கருணாநிதி மறைவுக்குப் பின் கனிமொழியே தன்னை நிரூபிக்க நினைத்தாரோ, அல்லது ஸ்டாலின் தான் அவருக்கு தேர்தல் அரசியலின் சவால்களை காட்ட நினைத்தாரோ அல்லது கனிமொழிக்கு கட்சியிலும், மக்களிடத்திலுமுள்ள செல்வாக்கை எடை போட நினைத்தாரோ தெரியவில்லை. அவரை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வைத்தார். எதிரில் தேசிய பலம் வாய்ந்த பி.ஜே.பி.யின் மாநில தலைவர் தமிழிசை. ஆயிரம் யூகங்களை அடித்து நொறுக்கிவிட்டு தாறுமாறான வித்தியாசத்தில் வென்றார் கனி.

என்னை நிரூபித்துவிட்டேன்… இனி கழகத்தின் டெல்லி முகமாகவும், தமிழகத்தில் கட்சியின் பெண் முகமாகவும் இருப்பேன் என்று தன் தாயார் ராசாத்தி மற்றும் நெருங்கிய உறவுகள், நட்புக்களிடம் பெருமை பேசிவிட்டு ஃபிளைட் ஏறினார் கனிமொழி. ஆனால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

டெல்லியில் ஸ்டாலினின் மனசாட்சியாக இருப்பார் கனிமொழி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி.ஆர்.பாலுவுக்கு முழு அதிகாரம் தந்து உலவவிட்டிருக்கிறார் ஸ்டாலின். பாலு ஒரு வெறித்தனமான ஸ்டாலின் ஆதரவாளர். எனவே எப்படி முடக்க முடியுமோ அப்படி முடக்குகிறார் டெல்லியில் கனியின் வளர்ச்சியை.

டெல்லியில்தான் இந்த நிலை என்றால், சென்னை அதற்கும் மேல் வாட்டி வதைக்கிறது . தனது அப்பாவும், கழக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதலமாண்டு நினைவு நாள் நிகழ்வுகளுக்கு, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பெண் என்பதால் அவரை வரவேற்க தான் இருக்க வேண்டும் எனும் எண்ணத்தில் விறுவிறுவென டெல்லியிலிருந்து கிளம்ப தயாராகி இருக்கிறார் கனிமொழி. 
ஆனால், ‘அவசரமாக வரவேண்டாம். மம்தாவை வரவேற்கும் பொறுப்பு உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.’ என்று தகவல் அவரது தலையில் இடியாய் விழுந்தது. பல்லைக் கடித்துக் கொண்டார். விழா நிகழ்வுகளிலும் முன்னுரிமை இல்லாமல் அடக்கி வைக்கப்பட்டார்.

அதேபோல் கருணாநிதியின் நினைவு தினத்தன்று அண்ணா சிலையிலிருந்து கிளம்பியது மெளன ஊர்வலம். அப்போது தன் அண்ணன் ஸ்டாலினுடனேயே நடந்து வந்தார் கனிமொழி. ஆனால் ஒரு கட்டத்தில் சுப்புலெட்சுமி ஜெகதீசன் அவரை பீட் செய்ய முயன்றிருக்கிறார். கனிமொழி, எரிந்து விழுந்துவிட்டாராம். இதெல்லாம் அருகில் நடந்து கொண்டிருந்த ஸ்டாலினின் கண்களில் விழுந்தும் அவர் தன் தங்கைக்காக அலட்டிக் கொள்ளவேயில்லை என்கிறார்கள்.

பாவம் கனிமொழி… முதல்வரின் மகள், இந்தியாவின் முக்கிய அரசியல்வாதியின் மகள் என்ற மமதையிலெல்லாம் ஆடியதோ, அரசு சொத்துக்களை கபளீகரம் பண்ணியதோ என்றெல்லாம் எதையும் செய்யாதவர். அவருக்கா இப்படி குடும்பத்தினுள் இருந்தே அடக்குமுறைகள் என்று பாவப்படுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதேவேளையில் மகளின் இந்த பிரச்னைகள் எல்லாமே புரிந்தும், அதிரடியாய் எதையும் செய்ய இயலாதவராய் இருக்கிறாராம் ராசாத்தி. கண்ணீர் ஒன்றே மகளுக்கு அவர் தரும் ஆறுதலாய் இருக்கிறதாம்.