பொன்.மாணிக்கவேல் மீது சிலைக்கடத்தல் தடுப்பு போலீசார் டிஜிபியிடம் புகார்

 

பொன்.மாணிக்கவேல் மீது சிலைக்கடத்தல் தடுப்பு போலீசார் டிஜிபியிடம் புகார்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது அப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது அப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து  வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன்,  பொன்.மாணிக்கவேளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக அவரை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதேபோல், பொன்.மாணிக்கவேலுக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து வந்தாலும், அவருக்கு எதிராகவும் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இதனிடையே, பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய 60 போலீசாருக்கு பணிக்காலம் முடிந்து விட்டதால், அவர்களை திருப்பி அனுப்பி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய குழுவை அமைக்கும் முயற்சியிலும் பொன் மாணிக்கவேல் தீவிரமாக உள்ளார்.

இந்நிலையில், சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றி வரும் கூடுதல் கண்காணிப்பாளர் உள்பட 13 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர். இதையடுத்து, மேலும் சில அதிகாரிகள் அவர் மீது டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.

அதில், தான் சுட்டிக்காட்டும் நபரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என பொன்.மாணிக்கவேல் கூறுகிறார். எங்களை சுதந்திரமாக பணி செய்ய பொன்.மாணிக்கவேல் அனுமதிக்கவில்லை. சிலைக்கடத்தல் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலின் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றினோம். பொய் வழக்கு, பொய் சாட்சியங்களை கைது செய்ய கோரி பொன்.மாணிக்கவேல் மிரட்டுகிறார் என கூறப்பட்டுள்ளது.