பொன்னமராவதி வாட்ஸ் அப் ஆடியோ: திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வாட்ஸ் அப் விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வாட்ஸ் அப் விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் 2 பேர் பேசிக் கொள்வது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ்ஆப்பில் பரவிய விவகாரத்தால், அந்த சமூகத்தினர் மத்தியில் கொதிப்பு நிலவுகிறது. மேலும், அங்குள்ள கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அவர்களில் சிலர் அடித்து நொறுக்கியதால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, போலீஸ் வாகனங்கள் மற்றும் போலீசார் மீதும் கற்களை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தினர். கலவரம் வெடித்ததையடுத்து, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள 30 கிராமங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி நண்பகல் 12மணி முதல் ஏப்ரல் 21-ம் தேதி நண்பகல் 12மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரத்தில் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த அய்யாசாமி என்பவர்தான் வாட்ஸ் அப்பில் ஆடியோ பரப்பியவர் என்று கொத்தமங்கலத்தைச் சேர்ந்த குகன் என்பவர் தவறாகச் செய்தி பரப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் அய்யாசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குகனை போலீசார் கைது செய்ததோடு இதில் தொடர்புடைய மாரிமுத்து என்பவரையும் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: சாமியார் கூறியதால் மகனை ஜீவசமாதியாக்கிய பெற்றோர்: சிறுவன் உயிருடன் இருந்ததாக பொதுமக்கள் புகார்!