பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு கிளம்பிய மக்கள்!

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு கிளம்பிய  மக்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். 

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்கள் அரசு விடுமுறை உள்ளதால் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  சென்னையிலிருந்து மட்டும் 14,263 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து 10,445 பேருந்துகள்  என மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் 30 மையங்களில்,  கடந்த 9ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

சிறப்பு பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திண்டிவனம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும்,  ஒசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், சேலம், கோவை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் வழக்கமாக பெருங்களத்தூரில் நிற்காது என்றும், அதற்கு பதிலாக ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் கார்கள் மூலம் வெளியூர் செல்வோர், ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியையும், திருக்கழுக்குன்றம் – செங்கல்பட்டு வழியையும் பயன்படுத்த போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. 6 நாட்கள் பொங்கல் விழாவை முடித்துக்கொண்டு திரும்புவதற்காக   வரும் 17 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.