பொங்கல் பண்டிகைக்கு 24,708 சிறப்பு பேருந்துகள்

 

பொங்கல் பண்டிகைக்கு 24,708 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் திருநாள் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், இயற்கையின் அருளினாலும், தங்கள் கடின உழைப்பாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய பொருட்களை இறைவனுக்குப் படைத்து வழிபட்டு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றார்கள்.

சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள், பொதுவாகவே பண்டிகைகளை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் தமிழர்களின் முக்கிய பண்டியான பொங்கல் திருநாளை சொந்த ஊர்களில் கொண்டாடும் பொருட்டு ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து கிளம்பி செல்வர். இதனால் சென்னை பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையிலிருந்து மொத்தம் 14,263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு கவுன்டர்கள் ஜனவரி 9-ம் தேதி திறக்கப்படும் என்றார்.