பொங்கல் ஜல்லிக்கட்டில் கலக்கிய அடங்காக் காளைகள்: அதுவும் ஓர் அமைச்சருடையது!!

 

பொங்கல் ஜல்லிக்கட்டில் கலக்கிய அடங்காக் காளைகள்: அதுவும் ஓர் அமைச்சருடையது!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சரின் காளைகள் உள்பட பல மாடுகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் தண்ணி காட்டிவிட்டு ஜெயித்தன

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சரின் காளைகள் உள்பட பல மாடுகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் தண்ணி காட்டிவிட்டு ஜெயித்தன.

அலங்காநல்லூர் முனியாண்டி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி முடிக்கப்பட்டதும் காலை 7 மணிமுதல் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 100 பேர் கொண்ட குழுவாக மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளின் திமில்களைப் பற்றி வீரர்களும் சூரத்தனம் காட்டினர். ஆனாலும் பல காளைகள் அவர்களை மிஞ்சி திமிறி ஓடின. 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஒத்தக் கொம்பன், செவலை கொம்பன், வெள்ளை கொம்பன் ஆகிய 3 காளைகளும் அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

அந்தக் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு ஏராளமான பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் மூன்று காளைகளும் ஆவேசத்துடன் சீறிப்பாய்ந்ததால் வீரர்களால் அவற்றை நெருங்கக்கூட முடியவில்லை. எல்லாருக்கும் தண்ணி காட்டிவிட்டு துள்ளி குதித்து தப்பியோடின. 

இத்துடன் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், எம்.எல்.ஏ. மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் ஆகியோரின் காளைகளும் பிடிபடாமல் தப்பித்தன. இந்த ஜல்லிக்கட்டில் 40-க்கும் அதிகமான வீரர்கள் மாடு முட்டியதில் காயமடைந்தனர்.