பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை; சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து!

 

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை; சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம். அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் நிறைவற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி ஆளுனருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன் மீது ஆளுனர் மாளிகை இந்நேரம் முடிவெடுத்து 7 பேரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் விடுதலையில் ஆளுனர் மாளிகை தாமதித்து வருகிறது.

இந்த சூழலில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்க்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ளது. அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள பாமக வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமானது எழுவர் விடுதலை. இந்த கூட்டணியில் மத்தியில் ஆளும் பாஜக-வும் அங்கம் வகிக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பாஜக கூட்டணி வைத்திருந்தாலும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.