‘பேபி மஃப்ளர்மேன்’ முன்பு டெல்லி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

 

‘பேபி மஃப்ளர்மேன்’ முன்பு டெல்லி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விழாவில், மஃப்ளர் அணிந்த ஒரு வயது குழந்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டான்.

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விழாவில், மஃப்ளர் அணிந்த ஒரு வயது குழந்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டான்.

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி முதல்வராக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் அவருடைய இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் டெல்லியை உருவாக்கியவர்கள் என்ற வகையில் 50 சிறப்பு விருந்தினர்கள் முதல்வருடன் மேடையில் கலந்து கொண்டார்கள். அதில் மருத்துவர்கள், பள்ளி ஆசிரியர்கள், தேர்வில் முதலிடம் பிடித்தவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவார்கள்.

மேலும் அதில் மஃப்ளர் அணிந்த ஒரு வயது குழந்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டான். ‘பேபி மஃப்ளர்மேன்’ என்று சுற்றியிருந்தவர்களால் அவன் கொஞ்சப்பட்டான். அவனது பெயர் ஆவ்யன் தோமர் என்பதாகும். அரவிந்த் கெஜ்ரிவாலை போலவே மூக்குக் கண்ணாடி மற்றும் ஆம் ஆத்மி தொப்பியையும் அவன் அணிந்திருந்தது பலரது கவனத்தை கவர்ந்தது. அந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.