பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் ! பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் வேண்டுகோள்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பின் போது பேனர் வைக்க வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு அக்டோபர் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மாமல்லபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், சாலைகளை சீரமைப்பதும் என சுறுசுறுப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது. அன்றாட வாழ்க்கையை ஓட்ட சாலையோரத்தில் கடை வைத்திருந்தவர்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் பிரதமர் முன்னோடியாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் “சுபஸ்ரீயின் மரணத்திற்கு நியாயம் வேண்டி தமிழர்கள் போராடி வரும் நிலையில், உங்களுக்காக பேனர் வைக்க தமிழக அரசு நீதிமன்றத்தின் அனுமதியை நாடியுள்ளது” என்று பிரதமரின் அலுவலக டுவிட்டர் கணக்கை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
மேலும், “இந்த இடையூறு பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை எடுத்து வைப்பதில் நீங்கள் ஒரு முன்னோடியாக செயல்பட்டால், அது தமிழர்களின் உணர்வுகள் மீதான உங்கள் அக்கறையை பிரதிபலிக்கும். மேலும் அதுவே உங்களுக்கு மிகப் பெரிய விளம்பரமாக அமையும். ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.