பெருங்களத்தூரில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் தந்தை, இரண்டு மகள்கள் உயிரிழப்பு

 

பெருங்களத்தூரில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் தந்தை, இரண்டு மகள்கள் உயிரிழப்பு

பெருங்களத்தூரில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் தந்தை மற்றும் அவருடைய இரண்டு மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை: பெருங்களத்தூரில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் தந்தை மற்றும் அவருடைய இரண்டு மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாம்பரத்தை அடுத்துள்ள புது பெருங்களத்தூர் பகுதியின் முத்தமிழ் தெருவில் வசித்து வந்த பெயிண்டர் ராஜாங்கம் (60) மற்றும் அவருடைய மகள்கள் கலா (40), சுமித்திரா (32) ஆகியோர் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டின் முன்பு கட்டிலில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் வீட்டிற்கு எதிரே உள்ள பெரிய மதில் சுவர் எதிர்பாராத விதமாக அவர்கள் மீது இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் மூவரும் சுவரின் உடைந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சுவரின் கனம் தாங்காமல் மூவரும் படுகாயமடைந்தனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூவரையும் இடிபாடுகளில் இருந்து மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜாங்கம் உயிரிழந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணிக்கு சுமித்திராவும், இன்று காலை 8 மணிக்கு கலாவும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே சமயத்தில் தந்தை மற்றும் இரண்டு மகள்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.