பெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கொடுத்த கணவர்!

 

பெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கொடுத்த கணவர்!

உத்தர பிரதேசம்: பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு கணவர் முத்தலாக் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியா நகரில் ஐதர் கஞ்ச் பகுதியில்  வசித்து வருபவர் ஜாப்ரின் அஞ்சும். இவருக்கும் இவருக்கு ஆஸ்திகர் அகமது என்பவருக்கும்  கடந்த ஆண்டு  நவம்பர் மாதம்  திருமணம்  நடைபெற்றது. இதையடுத்து இருவரும் அகமதுவின் சொந்த ஊரான கத்வாரா கிராமத்தில் வசித்து வந்தனர். 

இந்நிலையில், ஜாப்ரின் அஞ்சும் பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காகத் தனது கணவர் முத்தலாக் வழங்கியுள்ளதாகப் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில்,  எனக்குத் திருமணமான நாளிலிருந்து கணவர் வரதட்சணை கேட்டு என்னைத் துன்புறுத்தி வந்தார். என் தந்தையால் வரதட்சணை கொடுக்க முடியாததால் என் கணவர் தினமும் என்னைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். இதனிடையே எனக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது கணவர் கடந்த 18 ஆம் தேதி எனக்கு முத்தலாக் கொடுத்து விட்டார். எனக்கு நீதி வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

அப்பெண் அளித்த  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.