பெண்களை தாக்கிய திமுக பிரமுகர்; மற்ற கட்சிகளுக்கு உதாரணமாக இருக்குமா திமுக!?

 

பெண்களை தாக்கிய திமுக பிரமுகர்; மற்ற கட்சிகளுக்கு உதாரணமாக இருக்குமா திமுக!?

பெட்டிக்கடை நடத்தி வந்த பெண்ணின் கடைய காலி செய்ய கூறி அப்பெண்ணை திமுக பிரமுகர் ஒருவர் தாக்கக் கூடிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை: பெட்டிக்கடை நடத்தி வந்த பெண்ணின் கடைய காலி செய்ய கூறி அப்பெண்ணை திமுக பிரமுகர் ஒருவர் தாக்கக் கூடிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பைரவர் கோயில் வாசலில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் வாசுகி. பல ஆண்டுகளாக இங்கு கடை நடத்தி வரும் இவரது கடைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவதும், இவரது கடையில் பூஜைப் பொருட்களை வாங்குவதும் வழக்கம். அதேபோல், பக்தர்களால் உடைக்க படும் தேங்காய்களை அறநிலையத் துறை ஏலம் விடும் போது அதனையும் சில ஆண்டுகளாக வாசுகி எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் சரவணனின் அண்ணன் சிவராமன் இந்த ஏலத்தை எடுத்துள்ளார். மேலும், வாசுகியின் கடைக்கு எதிரில் சிவராமன் பெட்டிக் கடையை நடத்த தொடங்கியுள்ளார். எனினும், கோயிலுக்கு வரும் பக்தர்கள், வழக்கமாக பொருட்கள் வாங்கும் வாசுகியின் கடையிலேயே வாங்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாசுகியை கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால் கடையை காலி செய்ய மாட்டேன் என வாசுகி கூறியுள்ளார். இதனால், இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வாசுகி உள்பட அவருக்கு ஆதரவாக பேசிய நான்கைந்து பெண்களையும் கடுமையாக அடித்து காயம் ஏற்படுத்தியதுடன் கடையில் உள்ள பொருட்களையும் தெருவில் வீசி எறிந்துள்ளனர் சரவணனின் கும்பல்.

இது போன்று பிரச்னைகளுக்கு உள்ளான கட்சி நிர்வாகிகள் பெயருக்கு தற்காலிக நீக்கம் செய்யப்படுவதுடன், பிரச்னையின் வீரியம் குறைந்தவுடன் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் இத்தகைய செயல்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எந்த கட்சியாக இருந்தாலும் சிந்திக்க வேண்டும்.

எனவே, இத்தகைய தவறை செய்யும் திமுக நிர்வாகிகளை நிரந்தரமாக கட்சியை விட்டு நீக்கி மற்ற கட்சிகளுக்கு திமுக உதாரணமாக இருக்க வேண்டும் எனவும், சட்டப்படி அந்த திமுக நிர்வாகிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.