பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலைகாரர் கைது

 

பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலைகாரர் கைது

தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்

புதுச்சேரி: தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி வில்லியனூர் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த சித்தமருத்துவர் தமிழ்ச்செல்வி. கடந்த சனிக்கிழமையன்று வழக்கம் போல் மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அச்சமடைந்த அவரது பெற்றோர், மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு கழுத்தறுக்கப்பட்டு ரத்த  வெள்ளத்தில் கிடந்த தமிழ்செல்வியை பார்த்து அதிர்சியடைந்த அவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழ்ச்செல்வி கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆறுமுகம் என்பவரை கைது செய்துள்ளனர்.

ஆறுமுகத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் அளித்துள்ளார். ஆட்கள் குறைவாக இருக்கும் சித்தா மருத்துவமனையில் தமிழ்ச்செல்வி தனியாக இருப்பதை பயன்படுத்தி அவரது நகைகளை ஆறுமுகம் கொள்ளையடிக்க முடிவு செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற ஆறுமுகம், தமிழ்செல்வியின் கழுத்தில் கிடந்த ஸ்டெதஸ்கோப்பை கொண்டு அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில், மயக்கமடைந்த தமிழ்ச்செல்வியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, அவரது நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து சென்றதாக ஆறுமுகம் வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு முத்தியால் பேட்டையை சேர்ந்த கலைவாணி, கிருஷ்ண‌வேணி ஆகியோரையும் கொலை செய்து, அவர்களது நகைகளை திருடி சென்றதையும் ஆறுமுகம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை கொலை செய்து அவர்களது நகைகளை கொள்ளையடித்து சென்ற விவகாரம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.