பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்காமல் மெத்தனப்போக்கோடு செயல்படும் தமிழக அரசுக்கு அம்மா மக்க முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்காமல் மெத்தனப்போக்கோடு செயல்படும் தமிழக அரசுக்கு அம்மா மக்க முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. பெண்கள் அச்சமின்றி சுதந்திரமாக இருப்பதற்கான அத்தனை அடிப்படைகளையும் மாண்புமிகு அம்மா உருவாக்கித் தந்தது. ஆனால் மாண்புமிகு அம்மா அரசு என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொண்டு, ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் பழனிசாமி ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்ச்சியாகவும் மிகுந்த கொடூரமாகவும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. வட மாநிலங்களில் எப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழல் பெண்களுக்கு ஏற்பட்டதோ அதேநிலை தமிழகத்திலும் காலூன்ற துவங்கியுள்ளது. இது உடனடியாக தடுக்கப் படவேண்டும்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பதிமூன்று வயது சிறுமி ராஜலட்சுமி கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட போதும், இக்கொடூர குற்றத்தை செய்த நபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நடிவடிக்கையை காவல்துறை தாமதப்படுத்தியதாக செயதிகள் வந்தபோது, அதற்கு கடும் கண்டனங்கள் எழுப்பிய பின்னர்தான் வேறு வழியின்றி குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை தாமதமாக நடக்கும் போது, குற்றங்ககள் எப்படி குறையும்.
தொடர்ச்சியாக பெண்கள் வயது வித்தியாசமின்றி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கபடுவதும், அதனை தொடர்ந்து நடைபெறும் கொடூர கொலைகளும், சங்கிலி பறிப்பு சம்பவங்களும், தமிழகத்தில் நடந்துவருவதை பத்திரிகைகள், ஊடகங்கள் தொடர்ந்து வெளிபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. போதுமான சட்டங்கள் இருந்தும் கூட, சட்டத்தை செயல்படுத்தக்கூடிய மனநிலையில் இந்த ஆட்சியாளர்கள் இல்லை என்றும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய பிரச்னைகளை மிகவும் மேம்போக்காக கையாளும் பழனிசாமி அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.