பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வரிகள் தான் காரணம்: ப.சிதம்பரம்

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வரிகள் தான் காரணம்: ப.சிதம்பரம்

சென்னை: பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு எதிர்கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. அதன்படி, நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு காரணம் அல்ல என்று மத்திய பாஜக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள் என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும், பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள அவர், கச்சா எண்ணெய் விலை 107 டாலராக ஆக இருந்த போது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை 78 டாலராக இருக்கும் போது விலை உயர்வு! ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.