புலந்த்சர் கலவரம்: எஸ்.பி பணியிட மாற்றம்; பசுவை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி உத்தரவு
புலந்த்சர் கலவரத்தையடுத்து, அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
லக்னோ: புலந்த்சர் கலவரத்தையடுத்து, அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சர் மாவட்டத்தில் உள்ள சயானா கிராமத்தில் பசுவதையைக் கண்டித்து நடைபெற்ற கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங், வன்முறையாளர்ளால் கல்லால் அடித்தும், கூர்மையான ஆயுதங்களால் தாக்கியும் கொல்லப்பட்டார். பெரும் சர்ச்சைக்குள்ளான, மாட்டிறைச்சி உண்டார் என்ற வதந்தியால் அடித்துக் கொல்லப்பட்ட இக்லாக் விவகாரம் தொடர்பாக விசாரித்து வந்தவர் சுபோத் குமார் சிங் என்பது கவனிக்கத்தக்கது.
அதன்பிறகு வன்முறையை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பஞ்ரங்தள் அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பலியானார். பலியான அந்த இளைஞரின் குடும்பத் துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்துள்ள யோகி, வன்முறைக்கு காரணமான பசுவை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கலவரம் தொடர்பாக காவல்துறை டிஜிபி நடத்திய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கலவரத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.பி.சிங் தவறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் கே.பி.சிங்கை பணியிட மாற்றம் செய்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. லக்னோவில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அம்மாநில உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, இந்த கவலறம் தொடர்பாக முக்கிய வீடியோ ஆதாரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், ஆய்வாளர் சுபோத்தை ஒரு நபர் சுடுவது போல் பதிவாகி உள்ளது. ஆய்வாளரை சுடும் இந்த நபர் விடுப்பில் கிராமத்திற்கு வந்த ராணுவ வீரர் ஜீத்து என தெரியவந்துள்ளதால் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.