புத்தாண்டில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வேண்டி ஆலயங்களில் பக்தர்கள் வழிபாடு!
புத்தாண்டின் முக்கிய நிகழ்வாக கோயில்களிலும், ஆலயங்களிலும் சிறப்பு தரிசனம் செய்து பக்தர்கள் வழிபாடு.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிளையார்பட்டி கற்பக விநாயகர், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர், மதுரை மீனாட்சியம்மன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்.
ராமேஸ்வரம் ராமநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே சிறப்பு தரிசனங்களில் கலந்துகொண்டு சாமியை வழிபாடு செய்தனர்.
அதேபோல் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னையில் பல்வேறு கோயில்களிலும் நடை திறக்கப்பட்டு சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மார்கழி மாத கடும் குளிரிலும் வந்து இறைவனை தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானை வழிபட்டனர். தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டது.
பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர். பார்த்தசாரதி கோயிலிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வடபழனி முருகன் கோயிலில் மூலவருக்கு அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. அதே போல் சென்னையை சுற்றி உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன்,
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் மற்றும் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கோயில்கள் மட்டும் இல்லாது தமிழகத்தில் அமைந்துள்ள மசூதிகளிலும், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடைபெற்றது.