புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த தயங்கும் மாநில அரசுகள்! துணிந்து செயல்படுத்திய 5 மாநிலங்கள்

 

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த தயங்கும் மாநில அரசுகள்! துணிந்து செயல்படுத்திய 5 மாநிலங்கள்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை இதுவரை குஜராத் உள்ளிட்ட 5 மாநில அரசுகள் மட்டுமே நடைமுறை படுத்தியுள்ளன. அதேசமயம் பெரும்பாலான மாநிலங்கள் அதனை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டி வருகின்றன.

சாலைகளில் விதிமீறல்களால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும், சாலைகளில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த மாதம் 1ம் தேதி அமலுக்கு வந்தது. புதிய சட்டத்தில், சிறு வாகன விதிமீறல்களுக்கான அபராத முன்பு இருந்ததை காட்டிலும் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

விதியை மீறும் வாகன ஓட்டிகள்

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்து 5 வாரங்கள் தாண்டி விட்டது. ஆனால் இதுவரை, குஜராத், கேரளா, உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்கள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதேசமயம் கடுமையான அபராதத்தை விதிக்கும் இந்த புதிய சட்டத்தை அமல்படுத்தினால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என பயத்தில் பல  மாநில அரசுகள் அதனை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

 போலீஸ் சோதனை

இருப்பினும், பீகார் மாநில அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை விரைவில் அங்கு அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்கள் குறைந்தபட்சம் 3 மாதங்கள் கழித்தே புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மத்திய அரசு ஒரு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டபிறகும், அதனை மாநில அரசுகளால் செயல்படுத்தாமல் இருக்க முடியுமா என்பது சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.