புதிய துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தால் நியூசிலாந்து பாதுகாப்பாக இருக்கும்; பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்!

 

புதிய துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தால் நியூசிலாந்து பாதுகாப்பாக இருக்கும்; பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்!

புதிய துப்பாக்கி பயன்பாட்டு சட்ட விதிமுறைகளால் நியூசிலாந்து பாதுகாப்பாக இருக்கும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்

வெலிங்டன்: புதிய துப்பாக்கி பயன்பாட்டு சட்ட விதிமுறைகளால் நியூசிலாந்து பாதுகாப்பாக இருக்கும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஐந்து இந்தியர்களும் உயிரிழந்துள்ளதாக நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரெண்டன் டாரண்ட் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தம்மை வெள்ளை இனவாதியாகக் கூறிக்கொள்ளும் பிரெண்டன் டாரண்ட் தவிர அவருடன் கைதான மூவருக்கும் இந்தத் தாக்குதலில் தொடர்பில்லை எனத் தோன்றுவதாக கிறிஸ்ட் சர்ச் காவல் ஆணையர் மைக் புஷ் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நியூசிலாந்து ஜெசிந்தா ஆர்டர்ன், “நியூசிலாந்து வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கருப்பு தினமாக மாறியுள்ளது. மசூதிக்குள் வழிபாடு நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது” என்றார்.

மேலும், துப்பாக்கி உரிமத்தை முன்னரே பெற்றிருந்த பிரெண்டன் கைது செய்யப்பட்ட போது ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், நியூசிலாந்தின் துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாகவும் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில, புதிய துப்பாக்கி பயன்பாட்டு சட்ட விதிமுறைகளால் நியூசிலாந்து பாதுகாப்பாக இருக்கும் எனவும், இந்த சட்டம் 10 நாட்களுக்குள் அமலுக்கு வரும் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் சுமார் 5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 1.5 மில்லியன் பேர் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளனர். நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, காவல்துறையினர் மற்றும் பின்னணி சோதனைகளுக்கு பின்பே உரிமம் வழங்கப்படும். உரிமம் பெற 16-18 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை வைத்திருப்பவர் மட்டுமே உரிமம் வாங்க வேண்டும். ஆனால், அவர் எத்தனை துப்பாகிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது நிர்ணயிக்கப்படவில்லை. அந்நாட்டு துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளின் படி, ஏழு குண்டுகள் வரை சுடும் செமி ஆட்டோமெட்டிக் (semi-automatic) துப்பாக்கிகளை மட்டுமே உரிமம் பெற்று வைத்திருக்கலாம். உயர் சக்திவாய்ந்த துப்பாகிகளை வைத்திருக்க அனுமதி கிடையாது. உரிமமும் வழங்கப்பட மாட்டது. ஆனால், உயர் சக்திவாய்ந்த துப்பாகிகளை கொண்டு மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாகிகள் மற்றும் குண்டுகளை பிரெண்டன் ஆன்லைனில் வாங்கியதாகவும், அவருக்கு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உயர் சக்திவாய்ந்த ஆயுதங்களை அவருக்கு விற்பனை செய்யவில்லை எனவும் “கன் சிட்டி” எனும் கடையின் உரிமையாளர் டேவிட் டிப்பில் தெரிவித்துள்ளார். இந்த கடையில் தான் பிரெண்டன் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆயுதங்களை வாங்கியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ராணுவ பாணியிலான தானியங்கி துப்பாகிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையான துப்பாகிகளை நாங்கள் அவருக்கு விற்பனை செய்யவில்லை எனவும் டேவிட் டிப்பில் தெரிவித்துள்ளார்.