புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு வழக்கு: நவம்பர் 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

 

புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு வழக்கு: நவம்பர் 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த விதித்த தடையை நவம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை: புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த விதித்த தடையை நவம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக முறைகேடு புகார் தொடர்பாக ரகுபதி ஆணைய விசாரணை அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் மேல் முறையீடு செய்தார். நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை கடந்த 10-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ரூ.375 இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுபதி ஆணையத்துக்கு, காவல்துறை அதிகாரி அறிக்கை அளித்துள்ளார் என தமிழக அரசு விளக்கமளித்தது.

இதையடுத்து, ஆணையம் இடைக்கால அறிக்கையோ, இறுதி அறிக்கையோ தாக்கல் செய்யாத நிலையில் எப்படி விசாரணை நடத்த முடியும் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த விதித்த தடையை நவம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.