புதிய டி.வி.,சேனல் ஆரம்பிக்கிறேனா? ரஜினி அளித்த விளக்கம்-வீடியோ

 

புதிய டி.வி.,சேனல் ஆரம்பிக்கிறேனா? ரஜினி அளித்த விளக்கம்-வீடியோ

புதிய தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கப் போவதாக வெளியான தகவல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்

சென்னை: புதிய தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கப் போவதாக வெளியான தகவல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

ரஜினிகாந்த் புதியதாக தொலைக்காட்சி சேனல் தொடங்கவுள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இது குறித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் அச்சிடப்பட்ட லெட்டா் பேட் மூலம் டிரேட்மார்க் பதிவாளர் அலுவலகத்திற்கு ரஜினி கையெழுத்திட்டு அனுப்பிய தடையில்லா சான்றிதழில், சூப்பா் ஸ்டாா் டிவி, ரஜினி டிவி, தலைவா் டிவி ஆகிய மூன்று பெயர்களை பதிவு செய்ய அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் ரஜினி மன்ற தலைமைக் கழக நிர்வாகியான வி.எம்.சுதாகர் பெயரில், சி.பிரகாஷ் என்பவர் விண்ணப்பித்துள்ளார். மேற்கண்ட பெயர்களில் டிவி சேனல்கள் தொடங்குவதற்கு எனக்கு (ரஜினிகாந்த்) எந்தவித ஆட்சேபனையும் இல்லை அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறப்பட்டிருந்தது. ஆனால், இது உறுதிபடுத்தப்படாத தகவலாக இருந்தது.

இந்நிலையில், ஓய்வுக்காக அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிய தொலைக்காட்சி சேனல் ஆரம்பிப்பது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, அந்த பெயர்களில் வேறு யாரோ தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க போவதாக தகவல் கிடைத்தது. எனவே, அதற்கு முன்பாக தொலைக்காட்சிக்கான அந்த பெயர்களை பதிவு செய்துள்ளளோம் என விளக்கமளித்தார்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, தான் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை எனவும், அதன் பின்னர் அது குறித்து பார்க்கலாம் எனவும் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.